Wednesday, June 22, 2011

திருவாசகத்தில் திருத்தசாங்கம் -


இறைவனது ஊர் எது?

நாம் ஏற்கனவே பாண்டிய நாட்டை இறைவனது நாடு என்று கண்டோம்.  சரி இறைவனது ஊர் எது.? மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் திருத்தசாங்கம் என்ற பகுதியில் இருக்கிறது இதற்கான விடை.

தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்
மாதாடும் பாகத்தன் வாழ்பதி என்? கோதாட்டிப்
பக்தரெல்லாம் பார்மேல்சிவபுரம் போல் கொண்டாடும்
உத்தரகோசைமங்கை ஊர்

ஆம்.  பக்தர்களெல்லாம் நிலவுலகச் சிவலோகமெனப் பாராட்டிச் சிறப்பாகப் போற்றும் திருஉத்தரகோசமங்கை தான் அந்த ஊர்.  சரி இந்த ஊர் எங்கே உள்ளது?  இராமநாதபுரத்திலிருந்து சில கல் தொலைவில் உள்ளது.  பேருந்து வசதி உள்ளது.  திருவாதிரைத் திருநாள் இங்கு மிகச் சிறப்பான திருவிழா ஆகும்.  கண்டு களித்து சொல்லுங்கள்.

சரி இறைவன் மகிழ்ந்து இருக்கும் ஆறு எது. ? இதோ திருத்தசாங்கத்தின் பதில்.

செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீ நம் சிந்தை சேர்
ஐயன் பெருந்துறையான் ஆறு உரையாய் தையலாய்
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தங் காணுடையான் ஆறு.

பாசத்தை நீக்கிய பிறகு உள்ளத்தே ஞான அமுதம் ஆறு போல் ஓடும்.  பற்று அறுத்தவர்கள் அந்த பேரின்பத்தை உணர்வார்கள்.  அது தான் சிவபெருமானுடைய ஆறு ஆகும்.

No comments:

Post a Comment