Tuesday, September 14, 2010

think in tamil. speak tamil. teach tamil. worship in tamil.
இன்று நான் தமிழ் ஹிந்துவில் தேர் பற்றி ஒரு கட்டுரை படித்துக்கொண்டிருந்தேன்  மயூரகிரி சர்மா என்பவர் எழுதி இருந்தார்.  மிக அருமையான கட்டுரை.
தேர் பற்றி திருக்குறளிலும் பல்வேறு செய்திகள் உண்டு. உதாரணமாக உருள்பெரும் தேர்க்கு அச்சாணி அன்னார் (குறள் 667) என்று வள்ளுவர் உவமை கூறக்காணலாம்.
இப்படித் துவங்கி வடமொழியில் இரதம் என்று சொல்லப்படுவதே தமிழில் தேர் என்று வழங்குகிறத எனவும் இது சிறப்பாக அரசர்களின் ஊர்தியைக் குறித்து நிற்பதாகவும்  ஆனால் தமிழ் இலக்கிய வழக்கில்  கானல் நீரை, ‘பேய்த்தேர் என்றும் ரோகிணி நட்சத்திரத்தை சூடாமணி நிகண்டு  ‘தேர் என்ற வினைச் சொல்லாலும் குறிப்பிடக் காணலாம் என்றும் விளக்கி உள்ளார்.  பின்னர் உருளும் தேர் போல பல இடங்களில் - பல சந்தர்பங்களில் தேர் என்ற சொல்லை நாம் எப்படியெல்லாம் உபயோகிக்கிறோம் என்பதை, "வானில் பறக்கும் விமானங்களை ஆகாசரதம் என்றும் மனவியல் கற்பனைத்திறனை மனோரதம் என்றும் அறிவாற்றலை ஞானரதம் என்றும் சிறந்த தர்க்கத்தை வாதரதம் என்றும் கூறுவர். எருதுகளால் இழுக்கப்படுவதை கோரதம் என்றும் குறிப்பிடுவர். இதனை கொல்லா வண்டி என்றும் கூறுவர்.  ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளும் கருடத்தாழ்வாரை விஷ்ணுரதம்என்றும் முருகனின் மயிலை ஸ்கந்தரதம் என்றும் அழைக்கும் வழக்கமும் உண்டு. மஹாதிரிபுர சுந்தரியாகிய அம்பாள் எழுந்தருள்வது ஸ்ரீ சக்ரரதம் என்பர். தமிழிலுள்ள ஆண்பாற் பிள்ளைத்தமிழில் சிறுதேர் உருட்டல் என்று ஒரு பருவம் இருப்பதும் சித்திரக்கவி மரபில்இரதபந்தம் என்ற ஒரு வகை இலக்கியம் இருப்பதும் ஈண்டு சிந்திக்கத் தக்கது" என்று விளக்குகிறார்.
தமிழ் இலக்கியத்திலே தேர் பற்றி வரும் செய்திகளை விளக்கும்
சங்ககாலத்தில் மன்னர்கள் புலவர்களுக்கு தேர்களைப் பரிசாக வழங்கியதாகவும்  இத்தகு செயல்கள் தேர்வண்மை எனப்படும் என்றும் கூறி புறநானூற்றுப் பாடலின் சில வரிகளை எடுத்துக்காட்டாகக் காட்டி இருக்கிறார்.
கறங்கு மணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
புரந்தோங்கு சிறப்பிற் பாரி (புறம் 200)
பொலந்தேர் மிசைப் பொலிவு தோன்றி (புறம் 4)என்பன இவற்றைக் ஓளவையார் தேர் செய்ய வல்லவர்கள் பற்றி தனது ஒரு பாடலில், “… வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த காலன்னோனே என்று பதிவு செய்கிறார் எனவும்,
இது போலவே சிறுபாணாற்றுப்படையில்,
புருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி
உருவ வான்மதி ஊர்கொண்டாங்கு
கூருளி பொருத வடுவாழ் நோன்குறட்
ஆரஞ் சூழ்ந்த வயில் வாய் நேமியொடு
 என்று தேர் செய்யும் முறையை சங்கப்புலவர்கள் அருமையாகப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிட்டு, பரிபாடலில் சிவபெருமான் முப்புரம் அழிக்க, பூமியாகிய தேரில் வேதக்குதிரைகள் பூட்டி நான்முகச்சாரதியுடன் மேரு மலையை வில்லாகவும் ஆதிசேஷனை நாணாகவும் கொண்டு சிரிப்பால் எரித்தழித்தமை குறிப்பிடப்படுகின்றமை சங்ககாலத்திலேயே வேத புராண மரபுடன் தமிழிலக்கியம் பின்னிப்பிணைந்திருந்தது என்பதையும் செம்மொழித் திறனையும் அக்காலத்தில் தேர்த்திறன் பற்றியிருந்த எண்ணப்பாங்கையும் வெளிக்காட்டுகிறது.
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ
வேத மாபூண் வையத் தேரூர்ந்து
நாக நாணும் மலை வில்லாக
முவகை யாரெயில் ஓரழல் அம்பின் முனிய
மாதிரம் அழலவெய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான் (பரிபாடல்-5-வரி 22-27)
இதைத் திருமூலர் தனது திருமந்திரத்தில்
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மலக் காரியம்
அப்புரம் எய்தமை ஆரறிவாரே
என்கிறார். " என விளக்குகிறார். திருநாவுக்கரசர் பெருமான் தமது தேவாரத்தில்
 
பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினொட்டெட்டு மற்றுங்
கரக்கோயில் கடிபொழில் சூழ் ஞாழற்கோயில்
கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே
என்று குறிப்பிடும் போது கூறும்கரக்கோயில்என்பது தேர்வடிவில் செய்யப்பெறும் கோயிலாகும் என்பது இராமநாதபுரம் கலாகேசரி ஆ.தம்பித்துரை ஸ்தபதியின் கருத்தாகும்." என தேர் வடிவில் அமைந்த கோவில்களைப்  பற்றிக் கூறுகிறார்.
 
இந்த வகையில் கும்பகோணம் ஆராவமுதப்பெருமாள் கோயிலிலும் திருக்கடம்பூர் மற்றும் திருவதிகை ஆகிய கோயில்களிலும் மூலாலயம் தேர்வடிவில் அமைக்கப்பெற்றிருப்பதையும் காணலாம். மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் ரதங்கள் என்பனவும் இவ்வகையில் நோக்கத்தக்கன.
 மேலும் அறிய  தமிழ் ஹிந்து வலைத்தளத்தில் அவர் கட்டுரையைப் படித்து இன்புறவும்.
 

No comments:

Post a Comment