Thursday, August 18, 2011

விவேக சிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

இன்றைய காலத்தில் நாம் நிதர்சனமாக பார்க்கும் ஓர் உண்மை.  பணமிருந்தால் உறவினர்கள் - நண்பர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு, அறிமுகப்படுத்திக் கொண்டு பலனடைய பலர் வந்து கூடுவர்.  அதே நேரத்தில் பணம் வற்றி விட்டால் -  துன்பம் தொடர்ந்து வந்தால் அனைவரும் காணாமல் போய்விடுவர்.  துன்பத்தை இறைவன் கொடுப்பதே நமககு வேண்டியவர் யார் என்பதை அறிந்து கொள்ளத்தான்.  எனவே துன்பம் வந்த காலத்தில் நமககு வேண்டியவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.  கூடா நட்பு கேடு தரும் என்பது கேடு வந்த பிறகு தானே தெரியவருகிறது.  இதையெல்லாம் முன்னமே பட்டு உணர்ந்திருப்பார் போல இந்தக் கவிஞர்.  அவர் பாடிய பாடல் இதோ.

ஆலிலை பூவும் காயும் அளிதரும் பழமும் உண்டேல்
சாலவே பட்சி எல்லாம் தம்குடி என்றே வாழும்
வாலிபர் வந்து தேடி வந்திப்பர் கோடாகோடி
ஆலிலை ஆதி போனால் அங்கு வந்து இருப்பார் உண்டோ?

ஆலமரம் செழிப்பாக இருக்கும் போது பறவைகள் பல அங்கு வந்து தங்கும்.  ஆனால் இலைகள் உதிர்ந்து மரம் பட்டுப் போய்விட்டால் அனைத்தும் குடிபெயர்ந்து செழிப்பான வேறு மரத்திற்குப் போய்விடும்.  அது போல பணம் இருக்கும் போது அதை அனுபவிக்க உறவினர்-உற்றார் எனப் பலர் வருவர்.  குழுமி இருப்பர்.  துன்பம் வரும் போது - செல்வம் சென்று விடும் போது அனைவரும் பறந்து விடுவர்.  உண்மை இது தானே.  அன்றும் இது தான் நடந்துள்ளது.  இப்போதும் இது தான் நடக்கிறது.

No comments:

Post a Comment